சென்னை, ஜுலை.27 இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளார். இவர், இலங்கை அதிகாரிகளை சந்தித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பணிகள் பற்றி நேரில் பார்வையிட்டு திரும்புவார் என்று இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கருணாநிதியின் கடிதத்துக்கு பதில் அளித்து, நேற்று (ஜுலை.26) ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பாகவும், அதில் இந்திய அரசால் அளிக்கப்படக்கூடிய பங்களிப்பு பற்றியும் தாங்கள் கடந்த 17ஆம் தேதி எழுதிய கடிதத்துக்கு நன்றி.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாகவும், இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை தமிழர் நலன் தொடர்பாக கடந்த ஜுலை 17ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது;
'இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர் சமுதாயத்தின் நிலையை முன்னெடுத்து செல்வது தொடர்பாக எங்கள் கருத்துக்களை தெரிவிக்க சொல்லி, கடந்த 9-ந் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ்வதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் இயன்றவரையில் மேற்கொள்வதாக தாங்கள் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாலும், தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய தகுந்த நடவடிக்கை இதுவரை அங்கு எடுக்கப்படவில்லை.
எனவே, இலங்கை தமிழர்கள் பிரச்சினை பொறுத்தவரை நீண்ட கால மற்றும் குறுகிய கால தீர்வுகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை திரும்ப செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றுமாகும். அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள் முகாம் வாழ்க்கையின் கடுமையை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே, இந்த தருணத்தில் இந்திய அரசாங்கம், இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூதரக தொடர்புகள் மூலமாக ஒருவரையோ அல்லது ஒரு சிறப்பு பிரதிநிதியையோ அனுப்பி அங்கு நிலவும் உண்மையான சூழலை மதிப்பிட்டு அறிந்து வரச்செய்யலாம்.
இதன்மூலம், இலங்கை அரசு இதுவரை மேற்கொண்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும், இலங்கை தமிழர்கள் மீண்டும் அவர்களுக்குரிய இடத்தில் குடியமர்த்துவது தொடர்பான பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.'
இவ்வாறு கருணாநிதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.