சென்னை, ஜுலை.28 வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, கோபால், ஜெயராமன், சைதை சிவா, புதுச்சேரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது;
அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எடுத்து சொல்லவே இந்த போராட்டம் நடக்கிறது. வன்னியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கேட்கிறோம்.
அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க போராடியதும் நான்தான். எனவே வன்னியர்களுக்காகவும் போராடுகிறேன். எல்லா மக்களுக்கும் சேர்ந்து போராடுவதால் இது குறுகிய நோக்கம் உடையதாக ஆகாது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறியால் அல்ல. 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்கள். அனைத்து நிலைகளிலும் வன்னியர்கள் பின்தங்கி உள்ளனர்.
1983-ம் ஆண்டு சட்டநாதன் பரிந்துரையை அமுல்படுத்தி இருந்தால் இந்த சமுதாயம் முன்னேறி இருக்கும். இடஒதுக்கீட்டுக்காக 1987-ம் ஆண்டு 7 நாள் தொடர் சாலை மறியல் செய்தோம்.
இந்த போராட்டதை பார்த்து உலகமே அதிசயப்பட்டது. வாகனங்கள் ஓடாததால் சென்னை மக்கள் பதறினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர். எங்களை அழைத்து பேசினார். அதன்பிறகும் வன்னிய சமுதாயத்துக்கு நீதி கிடைக்கவில்லை.
இப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும் எங்களுக்காக குரல் கொடுத்தவர்தான். ஆனாலும் வன்னியர்களுக்கு இன்னமும் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. 109 ஜாதிகளுக்கு சேர்த்துதான் இடஒதுக்கீடு உள்ளது.
வன்னியர் பிரச்சினை பற்றி பேச எந்த கட்சி இருக்கு? யாருமே இல்லை. அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு கொடுத்ததுபோல் வன்னியர்களுக்கும் கேட்கிறோம்.
தனி இடஒதுக்கீடு கிடைக்கா விட்டால் 87-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் நடக்கும் சூழ்நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். தேர்தலை மனதில் வைத்து சொல்லவில்லை. தேர்தலை 2-ம் பட்சமாக நினைக்கிறோம். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேற காத்திருப்போம். இல்லை என்றால் 87-ல் நடைபெற்றது போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.