சென்னை, ஜுலை.29 தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ள ஏவிஎம் நிறுவனமும், அதன் நிறுவனர் ஏவி மெய்யப்ப செட்டியாரும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்கள். பல தயாரிப்பு நிறுவனங்களும், பல ஸ்டுடியோக்களும் இருக்கும் இடம் இல்லாமல் போனாலும், அதே கம்பீரத்துடன் இன்னும் தனது ஏவிஎம் உலகத்தை சுழலவைத்துக் கொண்டிருப்பது ஏவிஎம் மட்டும்தான்.
இந்த பெருமைக்கு சொந்தகாரரான ஏவி மெய்யப்ப செட்டியாரின் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சொற்பொழிவு நேற்று (ஜூலை 28) சென்னை, ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஏவிஎம் சரவணன், ஆர்.எம்.வீரப்பன், கவிஞர் வாலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய வாலி ஏவிஎம் செட்டியாருடன் தான் பழகியதையும், அவருடைய தேச பக்தி, மொழி பக்தி, கடவுள் பக்தி போன்றவற்றை பற்றி பேசி கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் பேசுகையில் "தமிழ் சினிமாவிற்கு பல பெருமைகளை சேர்த்த ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு சென்னையில் எங்கயாவது ஒரு இடத்தில், அவருடைய திரு உருவச்சிலையை நிருவ வேண்டும். இந்த கோரிக்கையை நான் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் எடுத்துச் செல்வேன்" என்றார்.
தமிழ் திரையுலகத்தின் பல கோரிக்கைகளை ஏற்கும் முதல்வர், தமிழ் சினிமா உருவாவதற்கு உருதுணையாக இருந்த ஏவிஎம்-ன் சிலை கோரிக்கையை ஏற்க மாட்டாரா என்ன.