புதுதில்லி, ஜுலை 29 விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடனான விவாதம் நடத்த வேண்டுமென்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றாவது நாளாக இன்றும் (ஜுலை.29) ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடர் ஜுலை.26ஆம் தேதி அன்று தொடங்கியது.
முதல் நாள் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் முதல் (ஜுலை.27) எதிர்க்கட்சிகள் சபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
விலைவாசி உயர்வு பிரச்சினையை கையில் எடுத்துள்ள அவர்கள் இது சம்பந்தமாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
இதற்கு இரு சபைகளிலுமே அனுமதி வழங்கவில்லை. எனவே தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடனான விவாதம் நடத்த வேண்டுமென்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றாவது நாளாக இன்றும் (ஜுலை.29) ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே விலைவாசி உயர்வு குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி இரு அவைகளின் தலைவர்களுக்கும் பிஜேபி இன்று புதிதாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த இரண்டு நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவையில் நேற்று (ஜுலை.28) ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மீராகுமார் வாய்ப்பளித்தார். அரசின் தோல்வியால் விலைவாசி உயர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.
அரசுக்கு வேறு வழியில்லாமல் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதாகவும், விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாகவும் அதே சமயம் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மானங்களை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்தார். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இன்று காலை அவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக புகார்கள் தெரிவித்தனர்.ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்க வேண்டுமென்று அவர்கள் சபாநாயகரை வலியுறுத்தினார்கள். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.
விலைவாசி உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது என்றும், அந்த உரிமையை தான் தர தயாராக இருப்பதாகவும் கூறிய மீராகுமார், ஒத்திவைப்பு தீர்மானம் மூலம்தான் விவாதம் நடத்த வேண்டும் என்பதில்லை என்றும் வேறு சில விதிகளின் கீழும் விவாதம் நடத்தலாம் என்றும் அதற்கு அனுமதி தர தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அதே சமயம் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க எதிர்க்கட்சிகளுக்கு உரிமையில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல்குழப்பத்திற்கு இடையே அவையை நண்பகல் 12 மணி வரை மீராகுமார் ஒத்திவைத்தார்.மாநிலங்களவையிலும் இதே போல இன்றும் அமளி ஏற்பட்டதை அடுத்து நண்பகல் வரை அவையை மாநிலங்களவை தலைவர் அமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே விலைவாசி உயர்வு குறித்து அவைகளை ஒத்திவைத்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்று கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்கு பிஜேபி புதிதாக நோட்டீஸ் கொடுத்துள்ளது.