சென்னை, ஜுலை 29 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது தொடர்பாக மத்திய புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (ஜுலை.29) வெளியிட்ட அறிக்கை
ஹரியானாவில் இருந்து சோழவந்தான் அருகே திருவாலயநல்லூருக்கு 12.7.2010-ல் லாரியில் கொண்டுவரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது தொடர்பான புகாரை சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஏற்கவில்லை.
நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இந்த வழக்கை விசாரித்து 2 மாதங்களில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
முதலில் இந்த புகாரை காவல் ஆய்வாளர் வாங்க மறுத்ததன் பின்னணி என்ன?
எனது ஆண்டிபட்டி தொகுதியில் கடமலைக்குண்டு பகுதியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 18.7.2010-ல் 8,700 பேருக்கு உதவிகளை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் 8700 பேருக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களை அழகிரி வழங்கியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியையும், சோழவந்தான் காவல் ஆய்வாளர் புகார் வாங்க மறுத்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அழகிரி பெயரில் ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.
எனவே இதை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.